|
எனது சிறு பிராயத்தில் வறுமை வாட்டியெடுத்தது என்றால், திரை உலகில் மற்றவர்களின்
அலட்சியமும் அவமானச் சொற்களும் துன்புறுத்தின
என்பதைச் சொல்லியிருக்கிறேன்.
அதற்கு மற்றோர் உதாரணத்தையும் உங்களிடம் சொல்லி வைப்பதில் குற்றமில்லை என்று
கருதுகிறேன்.
'பவநாராயணா'
என்ற தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தமிழில் ஒரு படத்தைத் தயாரித்தார். அது ஒரு
'ராஜா-ராணி'க் கதைப் படம். அதில்
வழக்கமான கதாபாத்திரம் தான் எனக்கு. ஆனால், ஒரு வித்தியாசம், யாருக்கும் பயப்படாத
வீராங்கனை.
இந்தப் படத்தில் என்னுடன் ஒரு சிரிப்பு நடிகர் நடித்தார். கொஞ்சம் படபடவென்று
பேசச்கூடியவர்.
ஒரு காட்சியில் அந்த சிரிப்பு நடிகரும் மற்றும் மூன்று சிப்பாய்களும் கதவைத்
திறந்து கொண்டு உள்ளே வர நான் ஒரு கதாயுதத்தை எடுத்துக்
கொண்டு அவர்களை எதிர்த்துத் தாக்கவேண்டும்.
இதற்கான ஒத்திகை நடந்தது. அப்போது ஒருசேர நான்கு ஆண்களைப் பார்த்ததும் நான் சற்றுத்
திகைத்துப் பிறகு எதிர்ப்பது போல் செய்தேன்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த, மறைந்த கதை வசனகர்த்தா அய்யாப்பிள்ளை ஒத்திகை
முடிந்து படமாக்கப்படுவதற்கு முன்பாக என்னிடம் வந்து,
"அம்மா, நீங்கள் யாருக்குமே பயப்படாத பெரிய வீராங்கனை. எத்தனை போர்கள் ஒன்றாக
வந்தாலும் பயப்பட மாட்டீர்கள். அதனால் திகைப்பது
போல் செய்ய வேண்டாம்" என்றார். நானும் சரி என்று தலையாட்டினேன்.
அப்போது ரிகர்சலுக்குப்பிறகு கதவைச் சாத்திக்கொண்டு தனது இடத்திற்குப் போன அந்த
சிரிப்பு நடிகர் நாங்கள் பேசிக்கொண்டதை சற்றே
கதவைத் திறந்தபடி பார்த்தார். உடனே, என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை,
அய்யாப்பிள்ளை அப்பால் போனதும், படக்கென்று முழுக்
கதவையும் திறந்த அந்த நடிகர் அருகில் நின்ற என்னிடம், "என்ன சொல்லிவிட்டப்போனார்
அய்யாப்பிள்ளை? என்னை வார்ரதுக்கு யோசனை
சொல்லிக் கொடுத்தாரா? என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது. இந்த (19)63-ம் ஆண்டு
என் 'டைம்'!" என்று கூறிவிட்டுப் படக்கென்று கதவைச்
சாத்திக்கொண்டுவிட்டார்.
அவரது இந்தத் திடீர் சொல்லடி எனக்குப் பெருத்த அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும்
ஏற்படுத்தி விட்டது. இதற்குள் "ஓகே. டேக்" என்று
டைரக்டர் குரல் கொடுத்து விட்டார். 'கிளாப்' பை வேறு அடித்து விட்டார்கள். எனக்கோ
ரிகர்சலில் செய்தது எதுவும் மனதில் நிற்கவில்லை.
திகைப்பில் அல்லாடிக் கொண்டு நின்றேன். இந்த லட்சணத்தில் கண்ணீர் வேறு
முட்டிக்கொண்டு வந்துவிட்டது. வேடமோ வீராங்கனை!
எப்படியோ தட்டுத்தடுமாறி அந்தக் காட்சியில் நடித்து முடித்துவிட்டேன். நல்லவேளை,
வசனம் இல்லை. 'ஆக்ஷன்' மட்டும்தான். அதனால்
தப்பித்தேன்.
காட்சி முடிந்ததும் எனக்குள் எழுந்த அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. செட்டிற்கு
வெளியே இருந்த என் அம்மாவிடம் வந்து ஒரு முறை
அழுது தீர்த்த பிறகுதான் கொஞ்சம் அமைதி அடைந்தேன்.
நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்ட எனது தாயார் எனக்குத் தேறுதல் சொல்லி
சமாதானப்படுத்தி விட்டுச் சொன்னார். "கவலைப்படாதே
பாப்பா, இந்த 63-ம் ஆண்டு மட்டும்தான் அவர் டைம்!" என்றார்.
நன்றி: திருமதி. மனோரமா & குங்குமம்
தொடரும்
|