Music Directors
Cine Playback Singers
Classical Singers
Lyricists
Classical Musicians
Classical Dancers
Music Teachers
Quiz Contest
Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersMalathy Lakshman
படிப்பை நிறுத்தியதே பாட்டுதான்! - மாலதி லஷ்மண்
நான் மாலதி... மன்மதராசா பாடின மாலதின்னா உங்களுக்கு பளிச்சுன்னு தெரியும். இசைப் பாரம்பரியம், கலைப்பாரம்பரியம்னு எங்க குடும்பத்தைப் பற்றி பெரிசா சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க. அப்பா பாஸ்கர் எலக்ட்ரீஷியன். அம்மா லலிதா இல்லத்தரசி. மூணு அண்ணன்கள். வீட்டுக்கு ஒரே செல்லப்பொண்ணு இந்த மாலதி. அப்பாவுக்கு பூர்வீகம் காஞ்சிபுரம். ஆனா நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் நம்ம சென்னையில தான். எந்த லட்சியமோ பெரிய கனவுகளோ இல்லாத ஒரு சராசரிப் பெண்ணாதான் வளர்ந்தேன். ஆனால் நான் குட்டிப்பொண்ணா இருக்கும்போதே என்னைச் சுத்தி ஒரு ரசிகர் கூட்டம் இருந்துகிட்டே இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கதான் என்னோட ரசிகர்கள். நேரங்கிடைக்கிறப்பல்லாம் 'நேயர் விருப்பம்' நடக்கும். நான் வாணி ஜெயராம் பாடின 'மேகமே மேகமே' மாதிரியான பாட்டுக்களை உற்சாகமா பாடுவேன். அந்த திண்ணைக் கச்சேரியில எனக்கு பரிசுகூட கிடைக்கும். பரிசுன்னா என்னன்னு நினைக்கிறீங்க எனக்கு பிடிச்ச உருளக்கிழங்கு பொரியல், குழம்பு, ஹேர்பின்னு எதையாவது கொடுத்து அசத்துவாங்க. நானும் ரொம்ப சந்தோசமா வாங்கிக்குவேன்.

நான் மகரிஷிவாசுதேவா மெட்ரிக்குலேஷன்ல எல்.கே.ஜி. படிக்கிறப்ப பாட்டுப் போட்டி நடத்துவாங்க. அப்போ நான் சுப்ரபாதம் பாடி பர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன். அடுத்து ஐந்தாவது வரைக்கும் கர்நாடகா ஸ்கூல்ல படிச்சேன். நிர்மலா கேர்ள்ஸ் ஹைஸ்கூல்ல நான் பத்தாவது படிச்சிட்டிருந்தப்போ என் படிப்பு பாதியிலே நின்னு போச்சு. காரணம் நான் பாடின ஒரு பாட்டு. ஆமாங்க அண்ணா கல்யாணத்தில் எல்லாரும் என்ன பாடச்சொல்லி வற்புறுத்த நான் ஆஷாபோன்ஸ்லே பாடின 'செண்பகமே செண்பகமே' பாட்ட பாடினேன். அந்த பாட்டு ஆர்கெஸ்ட்ரா காரங்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. என்ன அவங்க ட்ரூப்ல பாட அழைச்சாங்க. எங்க வீட்டுல சம்மதம் கொடுக்க என்னோட பதிமூணாவது வயசில ஆர்கெஸ்ட்ரால பாட ஆரம்பிச்சேன். 'வாளு போயி கத்திவந்த கதை'யா நான் பாட ஆரம்பிச்சதும் என் படிப்பு போச்சு.

நான் பாடி முதன் முதலா வாங்கின சம்பளத்தை என்னால மறக்கவே முடியாது. என்னோட முதல் கச்சேரி முடிந்ததும் எஸ்.என். சுரேந்தர் என்கிட்ட ஒரு ஐம்பது ரூபாயக் கொடுத்து வச்சுக்கம்மான்னாரு. அது தான் நான் பாடி வாங்குன முதல் சம்பளம். அந்த ஐம்பது ரூபா தான் நான் இன்னக்கி ஆயிரமாயிரமா சம்பாதிக்கிறதுக்கான ஆரம்பம். அதுக்கப்புறமா நான் தொடர்ந்து பல ஆர்கெஸ்ட்ரால பாட ஆரம்பிச்சேன். அந்த சமயத்தில் 'ஸ்ருதி இன்னிசை மழை' ட்ரூப்ல பாட எனக்கு வாய்ப்பு கெடச்சுது. அங்கே தான் எனக்கு லட்சுமண் அறிமுகமானார்.

லட்சமண் அமைதியானவர் ரொம்ப பொறுமைசாலி. எல்லார்கிட்டையும் கலகலன்ன பேசுறவர் ஏனோ எங்கிட்ட மட்டும் பேசமாட்டார். என்னக் கண்டாலே ஒதுங்கிப் போயிருவார். இதுதான் என் கவனத்தை அவர் மேல் திருப்பியது. எப்பவும் அவரப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். அப்புறம்தான் அது காதல்னு தெரிஞ்சது. என்னோட காதல அவரோட நண்பர் மூலமா லட்சுமண்ட்ட சொன்னேன். லட்சுமணனும் என்ன விரும்பினதால என் காதல மறுக்காம ஏத்துக்கிட்டார். உடனே கல்யாணம் பண்ணிக்க நினைச்சோம்.

ஆனால் எங்க ரெண்டு வீட்டிலயும் எங்க காதலுக்கு பயங்கர எதிர்ப்பு. வேறவழியில்லாம வீட்டை விட்டு வெளியேறி நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோ ம். கல்யாணமான புதுசில நான் பாடுறத கொஞ்ச நாள் நிறுத்திட்டேன். ஆனால் குரல் வளங்கிறது எல்லார்க்கும் அமையறதில்ல, அது ரொம்ப அபூர்வமான விஷயம்னு லட்சுமணனோட நண்பர் ஒருத்தர் எடுத்துச் சொல்ல மீண்டும் பாட ஆரம்பிச்சேன்.

தொடர்ந்து பதினஞ்சு வருஷம் ஓய்வு ஒழிச்சல் இல்லாம பாடிகிட்டே இருந்தேன். நான் ஆர்கெஸ்ட்ராவில பாடின காலத்திலேயே எனக்கு ரசிகர்கள் உண்டு.

நான் கர்ப்பிணியா இருந்த காலகட்டத்தை என்னால மறக்கவே முடியாது. அப்போ எனக்கு என் கணவரைத் தவிர வேற எந்த ஆதரவும் கிடையாது. அவரும் கச்சேரிக்கு போயிருவாரு. பல நேரங்கள்ல நான் தன்னந்தனியா வீட்டுல இருப்பேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கும்.

எனக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது. அந்த பத்து மாசமும் வெறும் ரசமும் சாதமும்தான் சாப்பாடு. பிரசவத்துக்கு முந்தின நாள்கூட ஆர்கெஸ்ட்ரால நான் பாடிட்டு இருந்தேன். எனக்கு குழந்தை பிறந்தப்போ லட்சுமண் எனக்கு துணையா இருக்க முடியாத சூழ்நிலை. ஆனா நாங்க பட்ட கஷ்டம் வீண் போகல லட்சுமணோட நண்பர் ஜெயப்பிரகாஷ் தேவா சார்ட்ட என்னை அறிமுகம் பண்ணி வெச்சாரு.

1997ல் தேவா சார் 'சாதி சனம்' ங்கிற படத்தில பாடவாய்ப்பு கொடுத்தார். அந்த படம் சரியா போகல. நான் பாடுன பாட்டும் பிரபலமாகல ஆனாலும் எனக்கு சந்தோஷம்தான். சினிமால பாடுறது என்ன சின்ன விஷயமா?

அதுக்கப்புறம் உடனடியா எந்த வாய்ப்பும் வரல. அப்போ ஒருநாள் வித்யாசாகர்கிட்டருந்து போன் வந்தது. அவரோட அலுவலகத்துக்கு வரச் சொன்னாரு போனேன். நான் காலைலேர்ந்து காத்துக்கிட்டே இருந்தேன். மூணு மணியாயிடுச்சு. ஆனா அவர் என்னை கூப்பிடவேயில்லை. கடைசியா ரெக்கார்டிங் தியேட்டர்ல பிரச்சனை அப்புறமா கூப்பிடுறோம்னு சொல்லி என்ன வீட்டுக்கு திருப்பி அனுப்பிட்டாங்க. சரி நம்ம வாய்ஸ் பிடிக்கல போலிருக்குன்னு நான் வந்திட்டேன்.

ஆனால் அன்னிக்கு சாயங்காலமே ஆறு மணிக்கு வித்தியாசாகர் ஆபீஸ்லருந்து மறுபடியும் வரச்சொன்னாங்க. அங்க போனதும் வித்யாசாகர் என்கிட்ட எதுவும் பேசல. பாடச்சொல்லி கேக்கல. நேரடியா சாங் ரெக்கார்டிங்தான்.

'கார்மேகம்' படத்துக்காக பாடின பாட்டு அது. படம் சரியாப் போகாததால பாட்டும் பிரபலமாகல. அதுக்குப் பிறகு பார்த்திபன் கனவு, அன்பே சிவம்னு வித்யாசாகர் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். மாணிக்க விநாயகம் தான் வித்யாசாகர்கிட்ட என்னைப்பத்தி சொல்லியிருக்காருன்னு அப்புறம் தான் தெரியும்.

ஒவ்வொரு பாட்டு பாடி முடிக்கிறப்பவும் இந்தப் பாட்டு பெரிய ஹிட்டாகுமான்னு ஆசையோட எதிர்பார்ப்பேன்.

அந்த சமயத்தில தான் தினா 'மன்மதராசா...' பாடுற வாய்ப்பை எனக்கு கொடுத்தார். அந்தப் பாட்டை நான் பாடுறப்ப அந்தப் பாட்டு அவ்வளவு பாப்புலராகும்னு எனக்குத் தெரியாது. பாட்டு வெளிவந்தப்புறம் நடந்த ரகளை தான் உங்களுக்குத் தெரியுமே.

அதுக்கப்புறம் மளமளன்னு எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. தெலுங்கு உட்பட பல மொழிப்படங்கள்ல பாடத் தொடங்கினேன். இதுவரைக்கும் தமிழ்ல நு஡த்திப்பத்து பாட்டு, தெலுங்குல நூத்தி நாய்பது பாட்டு, கன்னடத்துல நாற்பது பாட்டு பாட்யாச்சு. மலையாளத்தில் மட்டும் ஓரே ஒரு பாட்டுதான்.

இளையராஜா இசையில அஞ்சு பாட்டு பாடிட்டேன். அவர்கிட்ட பாடுனத நெனச்சா இன்னும் கனவா நினைவான்னு சந்தேகமா இருக்கு. அந்த சந்தோசத்த வார்தைகள்ல சொல்ல முடியாது. ஏ.ஆர். ரகுமானும், ஹாரிஸ் ஜெயராஜூம் கண்டிப்பா வாய்ப்பு தருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு பாக்கலாம்.

எனக்கு இப்ப கிடைக்கிற மரியாதை கவுரவம், அங்கீகாரம்னு எல்லாம் நான் மேடைப்பாடகியா இருந்தப்பவே கிடைச்சுது. ஜானகி, ஜேசுதாஸ், எஸ்.பி.பி. எல்லாரும் என்னோட ரசிகர்கள்னு அவங்களே சொல்வாங்க.

ஆவடியில ஒரு கச்சேரி நான் எல்லா மேடையிலையும் வழக்கமா பாடுற விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணனோட 'ஒன்னாம் படியெடுத்து' பாட்ட அமர்க்களமா பாடி முடிச்சேன். அப்போ ஒரு அம்மா அவசர அவசரமா மேடையேறி வந்தாங்க. அவங்க கழுத்துல போட்டிருந்த செயின படபடப்போட என் கழுத்துல போட்டுட்டு என்ன கட்டிப்பிடிச்சிட்டாங்க. உணர்ச்சிவசப்பட்டதால அவங்க கண்ணெல்லாம் கலங்கிப் போயிருந்துச்சு. என்கிட்ட அந்தம்மா எதுவுமே பேசல, பேசாம போயிட்டாங்க. இப்ப வரைக்கும் அந்தம்மா யாரு? என்னன்னு தெரியாது. ஆனால் அந்தம்மாவோட அன்பைத்தான் அவார்டா நினைக்கிறேன்.

ஆரணியில அன்புன்னு ஒரு ரசிகர் இருக்கார். அவருக்கும் எனக்கும் என்ன பூர்வ ஜென்மத்து பந்தமோ தெரியல. ஒவ்வொரு புது வருசத்திற்கும் மறக்காம 'இது தாய் வீட்டு சீதனம்' என்கிற வாசகத்தோட ஒரு புதுப் புடவை அனுப்பிடுவாரு. அந்த சகோதரனோட அன்புக்கு என்ன கைமாறு செய்யப்பபோறேன்னு தெரியல.

இப்படி என்மேல அன்பைப் பொழியுற ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்காங்க. மனசை காயப்படுத்துறவங்களும் உண்டு. ஒரு கல்யாணத்தில பாடிட்டு இருந்தப்ப ஒரு பையன் என் ட்ரஸ்ஸை பிடிச்சு இழுத்துட்டான்.

உடனே அங்க பெரிய கலாட்டா ஆயிடுச்சு. அந்த கலாட்டாவால லட்சுமணுக்கு அடிபட்டு ஹஸ்பிட்டல்ல சேக்குற நிலைமை. அந்த கல்யாணமே நின்னு போற மாதிரி பிரச்சனை பெருசா ஆயிப்போச்சு. பெண்ணோட அம்மா அப்பா சடார்னு எங்க கால்ல விழுந்துட்டாங்க பாவம். யார் செஞ்ச தப்புக்கு யார் மன்னிப்பு கேக்குறது. அப்புறம் ஒரு வழியா பிரச்சனை முடிவுக்கு வந்துச்சு. ஆர்கெஸ்ட்ராவுல பாடுறப்போ இப்படி சில கசப்பான அனுபவங்களும் ஏற்படுறதுண்டு. ஆனால் மக்கள் தன்னை மறந்து ஆரவாரமா கை தட்றப்போ எல்லாம் மறந்து போகும். இப்போ என் மகள் ஸ்ருதி அருமையாப் பாடுறா வீடு கொள்ளாத அளவுக்கு பாடி ப்ரைஸ் வாங்கியிருக்கிறா. சங்கீரம் முறையா கத்துக்கிறா.

நான் எதையும் எதிர்பார்க்காமலேயே எனக்கு எல்லாம் நிறைவா கிடைச்சுருக்கு. இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.

தினமலர், பெண்கள் மலர், 1-10-2006

More Articles